Sunday 20 March 2011

சிட்டுக்குருவி எண்ணிக்கை குறைவால் உணவு உற்பத்தியில் பாதிப்பு





பழநி : சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை குறைய, குறைய உணவு உற்பத்தியும் குறையும் என, சிட்டுக்குருவி தினத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.பழநி மலை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் அக்ஷயா கலையரங்கில் "குருவிகள் தினம்' கொண்டாடப்பட்டது. பழநி மலை பாதுகாப்பு மன்ற தலைவர்கண்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சதாசிவம், செயற்குழு உறுப்பினர் அருட்செல்வன் உள்ளிட்டோர் பேசினர்.இங்கு பேசியவர்கள் குறிப்பிட்ட விபரங்கள்:
60 கோடி மொபைல் போன்கள் உள்ளன. இதற்காக 5 லட்சம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஏற்படும் மைக்ரோ வாய்ஸ் அதிர்வால் 30 சதவீத சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டன. சிட்டுக்குருவி, தேனீ உள்ளிட்டவை அழிந்து கொண்டே வருவதால், அயல் மகரந்த சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும், சிட்டுக்குருவிகளுக்கு விஷமாக மாறி, அவைகள் உயிரிழக்க நேரிடுகிறது.தொடர்ந்து கட்டப்படும் கான்கிரீட் வீடுகளால் சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டுவதற்கு போதிய இட வசதி இல்லாததாலும் அவற்றின் இருப்பிடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை பெருக்க மரத்தாலோ, மூங்கிலாலோ அல்லது மண் கலசங்கள் மூலமாகவோ சிட்டுக்குருவிகளின் கூடுகளை செய்து ஜன்னல் அல்லது நிழல் தட்டி போன்ற இடங்களில் தொங்க விட வேண்டும். சிட்டுக்குருவிகள் எங்கு தென்பட்டாலும் அவற்றிற்கு தானியங்கள் மற்றும் தண்ணீரை வழங்க வேண்டும்.சிட்டுக்குருவி ஜோடிகள் தென்பட்டால் அவற்றின் செயல்பாடுகளை, உணவு முறையை, முட்டையிடுவதை கண்காணிக்க வேண்டும். வேளாண்மைக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இருக்க, விழிப்புணர்வு முயற்சிகளையோ அல்லது சரியான அறிவுரைகளையோ வழங்க வேண்டும்.

Thursday 3 March 2011

இயற்கை விவசாயமே எங்கள் உயிர் மூச்சு ராமரணை கிராம விவசாயிகள் பெருமிதம்

திம்பம் அருகே உள்ள ராமரணை கிராம மக்கள் இயற்கை விவசாயம் புரிந்து நல்ல விளைச்சலை பெற்று முன்னோடியாக உள்ளனர்.சத்தியமங்கலத்தில் இருந்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்றால் திம்பம் மலைப்பகுதி வரும். அங்கிருந்து தலமலை வழியாக சென்றால் 20வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராமரணை என்னும் நஞ்சுபடாத கிராமம். இயற்கையான காற்று; திரும்பிய பக்கமெல்லாம் பச்சைப் பசேல் என்று வளர்ந்து நிற்கும் மரங்கள் காணப்படுகிறது.
யானை நடமாட்டம் அதிகமுள்ள இந்த கிராமத்தில் 15 குடும்பங்களில் 60க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மின்சார வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி எதுவுமின்றி இயற்கையோடு அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வனத்தை நேசித்து பழகிப்போன மக்களுக்கு வன விலங்குகளை பார்த்தும் பயம் கிடையாது. 70க்கும் மேற்பட்ட ஏக்கரில் மானாவாரியாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் இன்று செயற்கை ரசாயன உரங்களை கொண்டு பயிரிடுகின்றனர். ஆனால், இந்த கிராமத்தை சேர்ந்த சில விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்கின்றனர். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் வானகம் போன்ற சில பசுமை அமைப்புகளும் ஊர் ஊராய் சென்று இயற்கை விவசாயத்தை பறைசாற்றி வருகின்றனர்.

ராமரணை கிராமம் மழை வளம் அதிகமுள்ள கிராமம். மானாவாரி விவசாயம் இங்கு செழிப்போடு உள்ளது. இப்பகுதி மக்களின் விவசாய முறையே வித்தியாசப்பட்டது; வனத்தில் உள்ள காய்ந்த இலைகள், சருகுகள் மேலும் கால்நடை கழிவுகள் முதலியவற்றை கொண்டு உரம் தயாரித்து பயன்படுத்துகின்றனர். பீன்ஸ், ராகி, எள் போன்றவற்றை பயிரிடுகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஈரோடு, திருப்பூர், கோத்தகிரி பசுமை அங்காடிகளில் விற்பனை செய்கின்றனர். இயற்கை முறையில் விளைவித்த பொருட்களுக்கு சந்தையில் அதிக விலை கிடைக்கிறது.

ராமரணையை சேர்ந்த ராமன் கூறியதாவது: பல ஆண்டுகளாக நாங்கள் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். கண்ட கண்ட ரசாயன உரம் போட்டு மண்ணை பாழ்படுத்த விரும்ப மாட்டோம். இயற்கை விவசாயத்திலேயே எல்லாம் கிடைக்கும் போது எதுக்கு செயற்கை. சுடர் நிறுவனம் மூலம் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி நடந்தது. இப்போது நாங்களே மண்புழு உரம் உற்பத்தி செஞ்சுக்கறோம்; நல்ல விளைச்சல், நல்ல விலை இரண்டுமே கிடைக்குது. காட்டுக்குள்ளே இயற்கையோட ஒன்றி வாழ்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்