Tuesday 19 April 2011

விவசாயம் செழிக்க விரைவான நடவடிக்கை : நம்மாழ்வார்.

"கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி' என்று போற்றப்படும் விவசாயிகள் நலன் பெறவும், விவசாயம் செழித்திடவும், அடுத்து அமையும் அரசு செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

வேளாண்மைக்கு அடிப்படையானது விளைநிலம். வேளாண்மைக்குரிய நிலங்களை வேளாண்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற பிற பயன்பாடுகளுக்கு, விளை நிலத்தை எடுப்பதை, முதலில் தடை செய்ய வேண்டும்.கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில், 100 நாள் வேலையை எப்போது செய்ய வேண்டும் என்பதை, கிராம சபைகள் முடிவு செய்ய வேண்டும். அப்போது தான், வேளாண்மை தொழிலை கிராம மக்கள் தடையில்லாமல் செய்ய முடியும்.தமிழகத்துக்கும், கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வரும் நதிநீர்ப் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க, மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கைக்காக, அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் ஒன்றுபட்டு பார்லிமென்டை புறக்கணிக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வார வேண்டும். அப்போது தான், கடைமடை விவசாயிக்கும் தாராளமாக நீர் சென்றடையும். இப்பணிகளை உழவர் பிரதிநிதிகள் மூலம் செயல்படுத்த வேண்டும். ஏரி, குளங்களில் உள்ள கருவேலம் மரங்களை அகற்ற வேண்டும். அப்போது தான், குளங்களில் தேக்கப்படும் நீரை, வேளாண்மைக்கு முழுமையாகப் பயன்படுத்த முடியும்.காவிரி ஆற்றில், கொள்ளிடம் பகுதியில், 17 கதவணைகளை அமைக்க வேண்டும் என, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன்மூலம், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, கதவணைகளை மூடியும், பிற சமயங்களில் திறந்தும் நீரைச் சேகரித்து பயன்படுத்த முடியும். கடலை நோக்கிச் செல்லும் காட்டாற்று நீரை தேக்கி பயன்படுத்த, தடுப்பணைகள் கட்ட வேண்டியது அவசியம்.

பால், உரமாக பயன்படும் எருவை வழங்கும் மாடுகளை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை அரசு தடை செய்ய வேண்டும். கிராமப்புற ஆண்களும், பெண்களும் கொண்ட குழுக்களை அமைத்து, அக்குழுவிடம், மாடு வளர்ப்பதை ஒப்படைக்க வேண்டும். இதற்கு அரசு நிதியுதவியும் வழங்க வேண்டும்.ஆறு, ஏரி, குளம் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் வகையில் உருவாக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே, இயங்கி வரும் ஆலைகள் குறித்து கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு முடியும் வரை, அந்த ஆலைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏரி, குளங்களில் மீன் வளர்ப்புக்கு ஊக்கம் அளிப்பதோடு, மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் அப்பணியை ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம், கிராமப்புற மக்களிடம் நிலவி வரும் சத்துணவு குறைபாடுகளைப் போக்க முடியும்.

தோட்டக்கலையில், சவுக்கு, மூங்கில் உள்ளிட்ட மரங்கள் மற்றும் மாம்பழம் போன்ற பழ வகைகள் சாகுபடியை பெருக்க வேண்டும். நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல், அனைத்து பயிர்களையும் கொள்முதல் செய்ய புதிய மையங்களையும் தொடங்க வேண்டும்.
ஊராட்சிகளில் உழவர் ஆலோசனை மற்றும் சேவை மையங்களைத் தொடங்க வேண்டும். இதன் மூலமே, சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருள்கள் வழங்கலாம்; பயிர் சாகுபடி பற்றி ஆலோசனைகளை அளிக்கலாம்; வேளாண்மை கருவிகளை வழங்கலாம்.வெள்ளப்பெருக்கு காலங்களில், பயிர் சேதங்களைத் தடுக்க பாரம்பரியப் பயிர்களை சாகுபடி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும். ஒற்றை நாற்று முறை மூலம் நெல் உற்பத்தி 3 டன் முதல் 5 டன் எக்டேருக்கு அதிகரித்துள்ளது. இதை நாடு முழுவதும் பரப்புவதன் மூலம், அரிசி தட்டுப்பாட்டைப் போக்க முடியும். ஒற்றை நாற்று முறையை, மற்ற பயிர்களிலும் அறிமுகம் செய்ய வேண்டும்.

சோளம், கம்பு, தினை, சாமை போன்ற சத்துணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும். தரிசாக உள்ள நிலங்களில், இதன் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கலாம்.தேசிய பல்லின பன்மை வாரியத்தை தமிழகத்துக்கு என அமைக்க வேண்டும். மரபின மாற்றுப் பயிர்களை தடை செய்ய வேண்டும். மாநில பட்டியலில் தான் வேளாண்மை உள்ளது. எனவே, இந்த நடவடிக்கையை மாநில அரசே செய்ய முடியும். மரபின மாற்றுப் பயிர்களால் புற்றுநோய் உள்ளிட்ட உயிர் குடிக்கும் நோய்கள் பரவும் என்பதால், அதன் ஆராய்ச்சிக்கும் தடை விதிக்க வேண்டும்.

கால்நடை மற்றும் விதைப் பண்ணைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இவற்றை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், அதன் மூலம் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், மகளின் சுயஉதவிக் குழுக்களிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். இயற்கை வேளாண்மை வெற்றியடைந்து வரும் இந்த வேளையில், அதை விரிவுபடுத்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.சொட்டுநீர், தெளிப்புநீர் பாசன வசதிகளை எற்படுத்த, 100 சதவீத மானியத்தையும் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். ரசாயன உரங்களைப் பயன்படுத்த அளிக்கப்படும் மானியத்தை, இயற்கை வழி வேளாண்மையைச் செய்யும் விவசாயிக்கும் அளிக்க வேண்டும்.இவற்றை அடுத்து அமையும் அரசு விரைவாகச் செய்யுமானால், "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?' என்ற பாடல் வரிகளை உண்மையாக்க முடியும்.

நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி.

Wednesday 6 April 2011

விவசாயத்தை எதிர்நோக்கும் முக்கிய பிரச்னை

பயிருக்கு தேவையான சத்துக்களில் முக்கியமானது தழைச்சத்து எனப்படும் நைட்ரஜனும், மணிச்சத்து எனப்படும் பாஸ்பரசும், சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் சத்தும் ஆகும். உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றாற்போல் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு உரங்களின் தேவை இன்றியமையாதது ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் 17 மில்லியன் டன் மணிச்சத்து சார்ந்த உரங்களை இடுகின்றனர். அது மட்டுமின்றி இதன் தேவை ஆண்டொன்றுக்கு 3 சதம் அதிகரிக்கிறது. தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி வர தொடங்கி உள்ளது. தற்போதைய நிலவரப் படி இன்னும் 30-40 ஆண்டுகள் வரைதான் விவசாய வளர்ச்சிக்கு இணையாக மணிச்சத்து சார்ந்த உரங்களை உற்பத்தி செய்ய முடியும். அது மட்டுமல்ல, தற்போது உற்பத்தியாகும் மணிச்சத்தில் 90% மொராக்கோ, சீனா, தென் அமெரிக்கா, ஜோர்டான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. எண்ணெய் வளம் கூட 75% 12 நாடுகளிலிருந்து கிடைக்கிறது. ஆனால் மணிச்சத்தோ 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தட்டுப்பாடு காலங்களில் சீனா மணிச்சத்துக்கான ஏற்றுமதி வரியை 135 சதம் உயர்த்தியது. அமெரிக்காவின் மணிச்சத்து சுரங்கங்கள் இன்னும் 20 வருடங்களில் வற்றிவிடும் அபாயநிலை உள்ளது. இதன் விளைவாக கடந்த 2003 முதல் 2006 வரை மணிச்சத்தின் விலை 350 சதம் உயர்ந்துள்ளது. 30 வருடங்களுக்குப் பிறகு மணிச்சத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்தால் மால்தூஸ் கூறியபடி பெரும் பஞ்சம் வரக்கூட வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வாக முழுமையான இயற்கை விவசாயத்தை நோக்கி சென்றாலும் வளரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பது கடினம்.
இதற்கு தீர்வுதான் என்ன?: 1. முடிந்த அளவு மணிச்சத்தை தற்போதிலிருந்தே சாணம் மற்றும் இயற்கை எருக்கள் (பசுந்தாள் உரம்) மூலம் இட தொடங்க வேண்டும்.
2. தேவையற்ற மணிச்சத்து உரத்தை அளிப்பதை தவிர்க்க வேண்டும். பயிருக்கு தேவையான அளவு மணிச்சத்தை தேவையான நேரத்தில் தேவையான முறையில் மட்டும் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மணிச்சத்து வீணாவதை குறைப்பதுடன் பயிரின் உற்பத்தி செலவை குறைத்து லாபத்தையும் பெருக்கலாம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் பயிருக்கு தேவையான மணிச்சத்தின் சரியான விகிதத்தை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
3. மண்ணில் அதிக அளவு மணிச்சத்து உள்ளது. ஆனால் அவை பயிரால் உபயோகப்படுத்த முடியாதபடி உள்ளது. ஒரு சில நுண்ணுயிர்கள் அமிலத்தை உற்பத்தி செய்து, மணிச்சத்தை கரைத்து பயிர்களின் வேர்கள் எடுக்கும் நிலைக்கு மாற்றிக் கொடுக்கும். இதன்மூலம் மணிச்சத்து உரத்தின் தேவையை குறைக்கலாம். இவ்வகை நுண்ணுயிரிகளை பாஸ்போ பாக்டீரியா என்று அழைக்கிறோம். ஆனால் இவை மண்ணில் இருக்கும் பயிர்களால் எடுக்க முடியாத மணிச்சத்தைதான் பயிருக்கு எடுக்க உதவும்.
4. மணிச்சத்து குறைந்த அளவு எடுத்து அதிக விளைச்சலை கொடுக்கும் ரகங்களை வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வேண்டும்.
5. மனித கழிவுகளில்தான் அதிக அளவு மணிச்சத்து உள்ளது. எனவே நகர்ப்புற மனித கழிவுகளிலிருந்து மணிச்சத்தை எடுக்கும் வழி வகையை கண்டுபிடிக்க வேண்டும்.
எண்ணெய் வளம் குறைந்தால்கூட அதற்கு மாற்று சக்தியாக சூரிய ஒளி, காற்று, அணு சக்தி என்று பல உள்ளது. ஆனால் மணிச்சத்து உரத்துக்கு மாற்று மேல் சொன்ன முறைகள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. வருங்கால சந்ததியரின் உணவுத்தேவை குறித்து இப்போதே சிந்திப்பது நல்லது. இந்த பிரச்னையின் பரிமாணம் இன்னும் உலகுக்கு பெரிய அளவில் தெரியவில்லை.

ஆட்டு எரு ஓர் சத்துமிக்க இயற்கை உரம்

நம் நாட்டில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியினை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளது. அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கினை விளைவிக்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க நாம் பயன்படுத்தும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களே நம்மை சிறிது சிறிதாக அழித்துக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் ரசாயன உரங்களின் விலையும் இப்பொழுது வேகமாக உயர்ந்துகொண்டே போகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இயற்கை உரங்கள் இட்டு உற்பத்தி செய்த காய்கறிகளை அதிக விலைகொடுத்து வாங்கி உண்ணும் பழக்கம் உள்ளது. இது எதைக்காட்டுகிறது என்றால், செயற்கை உரம் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதுதானே. இதுபோன்ற எல்லா பிரச்னைகளையும் போக்க இயற்கை நமக்கு தந்த வரப் பிரசாதம்தான் ஆட்டு எருவாகும்.
ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல் 2 மடங்கு தழைச்சத்தும், சாம்பல் சத்தும் உள்ளது. ஒரு ஆடு, ஒரு வருடத்திற்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கும். ஒரு ஏக்கர் நிலத்தை எல்லா சத்துக்களையும் கொண்டு தயார்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. "ஆட்டு எரு அவ்வாண்டு மாட்டு எரு மறு ஆண்டு' என்ற பழமொழிக்கு ஏற்ப ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப்புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது. ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருட்களின் அளவு அதிகரித்து ஈரப்பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது.
ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவைகளுக்கு அளிக்கப் படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும். ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களை குதிரைமசால், முயல்மசால், வேலி மசால், சுபாபுல், தட்டைப்பயறு போன்ற தீவனங்களை அளித்தால் எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு நுண்ணூட்டச் சத்துக்களும் தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச்சத்தும், 0.4 சதம் மணிச்சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளது. மேலும் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகிறது.
நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் பண்ணலாம். அதற்கு முதலில் ஆட்டுக்கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத்தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க்கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஒரு ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்பவேண்டும். அவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ்கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ்கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச்சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ்கூளத்தில் உள்ள ஈரத்தன்மையை பொறுத்து 3லிருந்து 4 மாதத்திற்கு ஒரு முறை ஆழ்கூள ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
ஆழ்கூள முறையை பொறுத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஒரு வருடத்தில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல் தழைச்சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச்சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல்சத்தும் கிடைக்கும். மேலும் ஆட்டு எருவில் உள்ள தழைச்சத்து மெதுவாக வெளிப்படுவதால் பயிர்கள் மற்றும் காய்கறிகளின் தேவைக்கேற்ப தழைச்சத்து சீராக கிடைக்கிறது. ஆனால் ரசாயன?உரம் தழைச்சத்தை உடனடியாக வெளியிடுவதால் நிறைய சத்து ஆவியாகி வீணாகிவிடும். இவ்வாறு ஆழ்கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும் எருவை நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்துவிதமான வேளாண் பொருட்களுக்கும் பயன் படுத்தினால் அதிக லாபத்தையும் அடையலாம். ரசாயன கலப்படத்தை தடுத்து உயிரிழப்பையும் தவிர்க்கலாம். ஆகவே ஆட்டு எருவினை முறையாக பயன்படுத்தி இயற்கைவழி வேளாண்மைக்கு வித்திட்டால் நாமும் உயரலாம். நமது நாடும் உயரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை