Wednesday 6 April 2011

விவசாயத்தை எதிர்நோக்கும் முக்கிய பிரச்னை

பயிருக்கு தேவையான சத்துக்களில் முக்கியமானது தழைச்சத்து எனப்படும் நைட்ரஜனும், மணிச்சத்து எனப்படும் பாஸ்பரசும், சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் சத்தும் ஆகும். உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றாற்போல் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு உரங்களின் தேவை இன்றியமையாதது ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் 17 மில்லியன் டன் மணிச்சத்து சார்ந்த உரங்களை இடுகின்றனர். அது மட்டுமின்றி இதன் தேவை ஆண்டொன்றுக்கு 3 சதம் அதிகரிக்கிறது. தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி வர தொடங்கி உள்ளது. தற்போதைய நிலவரப் படி இன்னும் 30-40 ஆண்டுகள் வரைதான் விவசாய வளர்ச்சிக்கு இணையாக மணிச்சத்து சார்ந்த உரங்களை உற்பத்தி செய்ய முடியும். அது மட்டுமல்ல, தற்போது உற்பத்தியாகும் மணிச்சத்தில் 90% மொராக்கோ, சீனா, தென் அமெரிக்கா, ஜோர்டான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. எண்ணெய் வளம் கூட 75% 12 நாடுகளிலிருந்து கிடைக்கிறது. ஆனால் மணிச்சத்தோ 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தட்டுப்பாடு காலங்களில் சீனா மணிச்சத்துக்கான ஏற்றுமதி வரியை 135 சதம் உயர்த்தியது. அமெரிக்காவின் மணிச்சத்து சுரங்கங்கள் இன்னும் 20 வருடங்களில் வற்றிவிடும் அபாயநிலை உள்ளது. இதன் விளைவாக கடந்த 2003 முதல் 2006 வரை மணிச்சத்தின் விலை 350 சதம் உயர்ந்துள்ளது. 30 வருடங்களுக்குப் பிறகு மணிச்சத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்தால் மால்தூஸ் கூறியபடி பெரும் பஞ்சம் வரக்கூட வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வாக முழுமையான இயற்கை விவசாயத்தை நோக்கி சென்றாலும் வளரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பது கடினம்.
இதற்கு தீர்வுதான் என்ன?: 1. முடிந்த அளவு மணிச்சத்தை தற்போதிலிருந்தே சாணம் மற்றும் இயற்கை எருக்கள் (பசுந்தாள் உரம்) மூலம் இட தொடங்க வேண்டும்.
2. தேவையற்ற மணிச்சத்து உரத்தை அளிப்பதை தவிர்க்க வேண்டும். பயிருக்கு தேவையான அளவு மணிச்சத்தை தேவையான நேரத்தில் தேவையான முறையில் மட்டும் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மணிச்சத்து வீணாவதை குறைப்பதுடன் பயிரின் உற்பத்தி செலவை குறைத்து லாபத்தையும் பெருக்கலாம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் பயிருக்கு தேவையான மணிச்சத்தின் சரியான விகிதத்தை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
3. மண்ணில் அதிக அளவு மணிச்சத்து உள்ளது. ஆனால் அவை பயிரால் உபயோகப்படுத்த முடியாதபடி உள்ளது. ஒரு சில நுண்ணுயிர்கள் அமிலத்தை உற்பத்தி செய்து, மணிச்சத்தை கரைத்து பயிர்களின் வேர்கள் எடுக்கும் நிலைக்கு மாற்றிக் கொடுக்கும். இதன்மூலம் மணிச்சத்து உரத்தின் தேவையை குறைக்கலாம். இவ்வகை நுண்ணுயிரிகளை பாஸ்போ பாக்டீரியா என்று அழைக்கிறோம். ஆனால் இவை மண்ணில் இருக்கும் பயிர்களால் எடுக்க முடியாத மணிச்சத்தைதான் பயிருக்கு எடுக்க உதவும்.
4. மணிச்சத்து குறைந்த அளவு எடுத்து அதிக விளைச்சலை கொடுக்கும் ரகங்களை வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வேண்டும்.
5. மனித கழிவுகளில்தான் அதிக அளவு மணிச்சத்து உள்ளது. எனவே நகர்ப்புற மனித கழிவுகளிலிருந்து மணிச்சத்தை எடுக்கும் வழி வகையை கண்டுபிடிக்க வேண்டும்.
எண்ணெய் வளம் குறைந்தால்கூட அதற்கு மாற்று சக்தியாக சூரிய ஒளி, காற்று, அணு சக்தி என்று பல உள்ளது. ஆனால் மணிச்சத்து உரத்துக்கு மாற்று மேல் சொன்ன முறைகள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. வருங்கால சந்ததியரின் உணவுத்தேவை குறித்து இப்போதே சிந்திப்பது நல்லது. இந்த பிரச்னையின் பரிமாணம் இன்னும் உலகுக்கு பெரிய அளவில் தெரியவில்லை.

No comments:

Post a Comment